Sunday, September 29, 2013

மைதா உணவுகள்-ஆதரவும் எதிர்ப்பும்



உணவுதான் நம்மை உருவாக்கிருக்கிறது.நீங்கள் யார் என்று கேட்டால் அது உணவுதான்.உண்மையில் நலவாழ்வு உணவைச்சார்ந்து இருக்கிறது.அது நோய்களைத்தீர்மானிக்கிறது.கிருமிகளை எதிர்க்க ஊட்டச்சத்து மிகுந்த உணவு தேவை.உடலின் சீரான வளர்சிதை மாற்றத்தை நம்முடைய சாப்பாடுதான் முடிவு செய்கிறது.இன்று மருந்துக்கடைகளில் குவியும் மக்களை அங்கே அனுப்பி வைக்கக் காரணம் உணவுமுறைதான்.



ஒவ்வொரு குடும்பத்துக்கும் குடும்ப மருத்துவர் இருக்கிறார்கள்.ஆனால் முக்கியமாக உணவியல் நிபுணர்கள்தான் தேவை. நீரிழிவு நோயாளிக்கான உணவு, இதய நோயாளிக்கான உணவு என்று ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது.அதிக உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு கூடுதலான கலோரி தேவை.ஒல்லியாக இருப்பவர்களுக்கும்,உடல் பருமன் உள்ளவர்களுக்கும் தனித்தனி உணவுப்பட்டியல் வேண்டும்.

ஊட்டச்சத்துப் பற்றாக்குறை இன்று நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.நிலத்தடி நீர் இருந்தவரை பப்பாளி,கொய்யா,வாழை,அகத்தி,நெல்லி போன்றவை வாய்க்கால் ஓரமாகவே கிடைத்துவிடும்.இன்றைய நிலை அப்படி இல்லை.நம்முடைய உணவில் தேவையான உயிர்ச்சத்துக்கள் இருக்கிறதா? என்பது நமக்குத்தெரியாது.


அன்றாட உணவில் ஏ வைட்டமின் எவ்வளவு இருக்கவேண்டும் என்று எத்தனை பேருக்குத்தெரியும்? இன்றைய நம் உணவில் எந்தெந்த உணவு மூலம் அந்த அளவைப்பெற்றிருக்கிறோம்? போதுமான அளவு நார்ச்சத்தை சாப்பிட்டோமா? ஒரு நாள் சரியாக காலைக்கடன் கழிக்காவிட்டால் மனநலனில் கூட மாற்றம் ஏற்படுகிறது.மலச்சிக்கல் வந்தவனைப்போல இருக்கிறான் என்று சொல்கிறோம்.

வெளியில் சாப்பிடுவதே அவ்வளவு ஆரோக்கியமில்லை என்று சொல்கிறோம்.ஆனால் இரண்டு பேரும் வேலைக்குச்செல்லும் சூழலில் வீட்டுக்கு பார்சல் வாங்குவது அதிகரித்திருக்கிறது.உணவகங்கள் அதிகரிக்கின்றன.குழந்தைகளுக்கான தின்பண்டங்களும் பொட்டலங்களை நம்பி இருக்கின்றன.சென்ற ஆண்டு ஒரு பேக்கரி இருந்த வீதியில் இன்று ஐந்து இருக்கின்றன.அத்தனையும் வியாபாரம் கொழித்துக்கொண்டிருக்கின்றன.


வெளியில் வாங்குபவை பெரும்பாலானவை மைதாவால் செய்யப்படும் உணவுகள்தான்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருபதிவில் மைதா நீரிழிவைத்தூண்டுகிறது என்று கேரளாவில் நடைபெறும் போராட்டம் பற்றி சொல்லியிருந்தேன். வலைப்பதிவுகளில் விரிவாக சில பதிவுகள் வந்திருக்கின்றன.இன்று வெகுஜன ஊடகங்களிலும் விவாதமாகிவிட்டது.தமிழ்நாட்டிலும் போராட்டங்கள் ஆரம்பித்துவிட்டார்கள்.

புதிதாக வேலைக்காக வெளியூர் வந்த ஒருவர் தினமும் இரவில் பரோட்டா சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.மருத்துவர் ஒருவரது அறிவுரைக்குப்பிறகு அந்தப்பழக்கத்தை விட்டுவிட்டார்.இப்போது  மருத்துவமனைகளில் கூட மைதா உணவுகளைத்தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கப்படுகிறது.தொற்றுநோயல்லாத நோய்களுக்கான(Non-communicable diseases) திட்டத்தில் முக்கிய தகவல்களாக சொல்லப்படுகின்றன.நார்ச்சத்து,எண்ணெய் போன்றவற்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.


நீரிழிவு அச்சுறுத்தும் விதத்தில் அதிகரித்துவருகிறது.இன்று சமூகப்பிரச்சினையாக கவனம் கொள்ளக்கூடிய நலக்குறைவு அது.உழைப்பு நாட்களை வீணடிப்பது ஒருபுறம்,மருத்துவச்செலவினங்கள் அதிகரிப்பது இன்னொருபக்கம் என்று நெருக்குகிறது.எப்போதாவதுதானே சாப்பிடுகிறோம் என்பது சூழல் காரணமாக அடிக்கடி என்று மாறிவருகிறது.குழந்தைகளுக்கும் இவற்றையே பழக்கப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

நம்மைப்போன்ற வளரும் நாடுகளில் உணவுகளைப்பரிந்துரைக்கும்போது கவனம் தேவை.அவை ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை போக்குவதாக இருக்கவேண்டும்.அன்றாடத்தேவையான உயிர்ச்சத்துக்களையும்,தாதுக்களையும் வழங்கவேண்டும்.உணவுப்பொருள் ஒன்றை ஆதரித்தாலும்,எதிர்த்தாலும் கவனத்தில் கொள்ளவேண்டியவை இவைதான்.சுவைக்காக மட்டும் ஒரு உணவைப் பரிந்துரைப்பது தனிமனிதனுக்கும்,தேசத்துக்கும் இழப்பை ஏற்படுத்தும்.
-

Thursday, September 26, 2013

குழந்தைகளிடம் ஏனிந்த மாற்றம்?



இரவு எட்டுமணிக்கு மேல் பேருந்தில் பயணம் செய்வதில் விவரிக்க முடியாத சுகம் இருக்கிறது.அதிக கூட்டம் இருக்காது.சிலுசிலுவென்ற காற்று வீசிக்கொண்டிருக்கும்.இன்று நான் பயணித்த பேருந்தில் மனதை வருடும் பாடல்கள் வேறு ஒலித்துக்கொண்டிருந்தது.சில நேரங்களில் இரண்டுபேர்,மூன்றுநபர் இருக்கையிலும் ஒருவரே ஆக்கிரமித்துக்கொள்ளலாம்.தூங்கிமேலே விழுபவர்கள் தொல்லை இல்லை.


எதிர் இருக்கையில் கணவனும் மனைவியும் குழந்தையுடன் அமர்ந்திருந்தார்கள்.குழந்தைக்கு சுமார் மூன்று வயது இருக்கும்.தூங்கிவிட்டது.குழந்தைக்கு வாங்கிய தின்பண்டத்தை தாய் விரலில் கோர்த்துக்கொண்டிருந்தார்.இரண்டு கையில் பத்துவிரல்களிலும் நுழைத்தாகிவிட்டது.ஒவ்வொரு விரலிலும் மெதுவாக கடித்துத் தின்ன ஆரம்பித்தார்.

சிலநேரங்களில் குழந்தையாக மாறிவிட மனம் விரும்புகிறது.சந்தோஷமான தருணங்களில் நம்மையே நாம் கொஞ்சிக்கொள்ளஆசைப்படுகிறோம்.கள்ளம்கபடமில்லாமல்வயல்வெளியை,பாடலை,மேகத்தை,நிலவை பிஞ்சுபோலரசித்துக்கொண்டிருப்போம்.உலகம்இனியதாகத்தெரிகிறது.குழந்தைகளுடன் விளையாடும்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம்.ஏனெனில் நாமும் குழந்தையாக மாறிப்போகிறோம்.


நண்பர் ஒருவர் தன்னுடைய குழந்தையின் நடவடிக்கையைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தார்.சிறுவன் முதல்வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறான்.தந்தை முகச்சவரம் செய்வது போல தானும் செய்ய ஆசைப்பட்டிருக்கிறான்.பெற்றோர் கவனிக்காத நேரத்தில் புருவத்தையெல்லாம் எடுத்துவிட்டான்.இன்னொருநாள் பையன் சொன்னான், டாடி நான் யாருக்காவது இந்தப்பூவை கொடுத்து ஐ லவ் யூ சொல்லிவிடட்டுமா?

பெரியவர்கள் குழந்தைகளாக விரும்பும்போது குழந்தைகள் பெரியவர்களாக விரும்புகிறார்கள்.ஐந்து வயதில் இத்தகைய நடத்தைகள் கொஞ்சம் யோசிக்கவேண்டிய விஷயம்.தாயிடம் அல்லது மற்ற உறவினர்களிடம் முக்கியத்துவம் கிடைக்காதபோது இப்படிநடந்துகொள்ளவாய்ப்பிருக்கிறது.தந்தையைப்போலஆகிவிட்டால் தான் ஒதுக்கப்படமாட்டோம் என்று தோன்றலாம்.ஆனால் உறுதியாக என்ன காரணம் என்று பெற்றோர்கள் கொஞ்சம் முயற்சி செய்தால் அறிய முடியும்.

இன்னொரு நாள் தான் கோபத்துக்கு ஆளானபோதுஅவனது நடத்தையைச் சொன்னார்.அப்போது தொலைக்காட்சித்தொடரில் வரும் பாத்திரத்தைப்போல தனது உணர்ச்சியை வெளிப்படுத்தினான்.இன்றைய சமூகமயமாக்கலில் தொலைக்காட்சி முக்கிய பங்கு வகிப்பது நாம் உணரவேண்டிய பயங்கரம்.பல நேரங்களில் தீவிரமான எதிர்மறை உணர்ச்சியை குழந்தைகளிடம் ஏற்படுத்துகின்றன.

தொலைக்காட்சியில் குழந்தைகள் முன்னிலையில் என்னென்ன நிகழ்ச்சிகள் பார்க்கலாம் என்று உணரவேண்டும்.குழந்தைகளுக்கு முன்பு  தொடர்களை தவிர்க்காவிட்டால் விரும்பத்தாகாத விளைவுகள்தான் ஏற்படும்.இன்னும் சில வீடுகளில் குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்துகொண்டிருக்கும்போது பெற்றோர் சீரியலில் மூழ்கி இருப்பார்கள்.படிக்கச்சொல்லி குழந்தைகளை ஒரு அறையில் வைத்துப் பூட்டிவிட்டு பார்ப்பதையும் ஒரு வீட்டில் பார்த்தேன்.

குழந்தைகளுக்காக நாம் பெற்றோர்கள் சில தியாகங்களைச் செய்யத்தான் வேண்டும்.கடன் வாங்கியும் கூட படிக்க வைக்கிறார்கள்.ஆனால் இத்தகைய விஷயங்களை கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்.குழந்தைகள் வயதுக்கும்,வளர்ச்சிக்கும் ஏற்றவாறு நம்முடைய பழக்கவழக்கங்கள் இருக்கவேண்டும்.படிக்காதவர்கள் குழந்தை வளர்ப்பு குறித்த எனது முந்தைய பதிவுகள்.


 

-

Tuesday, September 24, 2013

கணவனோ,மனைவியோ விட்டுக்கொடுத்தால் என்ன நடக்கிறது?



தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துபோகவேண்டும் என்று சொல்கிறார்கள்.விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்றும் சொன்னார்கள்.பதிவுலகம் அறிந்த திண்டுக்கல் தனபாலன் முந்தைய பதிவுக்குஇப்படி கருத்துரை இட்டார், விட்டுக்கொடுத்(த்)தால்...? எதை விட்டுக்கொடுக்கிறார்கள்? தன்னுடைய கருத்து சரியல்ல என்று ஒப்புக்கொண்டு அமைதியாகிவிடுவார்களா?


பொறுத்துப்போகவேண்டும், விட்டுக்கொடுக்கவேண்டும்,அட்ஜஸ்ட் செய்து போகவேண்டும் என்பதெல்லாம் காலம்காலமாக இருந்து வருகிறது.கவனித்துப்பார்த்தவர்கள் இதில் உள்ள உண்மையை புரிந்து கொண்டிருப்பார்கள்.இவையெல்லாம் பெண்ணுக்காக சொல்லப்பட்டு வருகின்றன.குடும்பப் பிரச்சினையின் போது பலரும் பெண்ணைப்பார்த்துத்தான் விட்டுக்கொடுத்துப்போ என்கிறார்கள்.

சுமார் இருபது ஆண்டு காலமாக பொறுமையாக விட்டுக்கொடுத்து வந்தவரை எனக்குத்தெரியும்.கணவரின் நடத்தையை ஊரில் உள்ளவர்களும் விமர்சிக்கவே செய்தார்கள்.அவர்களுக்கு ஒரே மகன்.மகனுக்கு நல்ல வேலை கிடைத்த பிறகு தாயும் மகனும் பக்கத்து நகரத்தில் வாடகை வீடு பார்த்து போய்விட்டார்கள்.போகும்போது அவருக்கு சொல்லவில்லை.


சொந்தவீட்டை விட்டு வந்து விட்டதைப்பற்றி அவரிடம் கேட்டேன்.நான் மட்டும் எத்தனை நாளைக்கு பொறுத்திருப்பது? இப்போதும் அவர் மாறவில்லை.மகனுக்கும் அவரைப் பிடிக்கவில்லை.ஆமாம்,அது-எது சொல்லப்பட்டதோ அது மிகச்சரிதான்.விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை.ஒருநாள் அவர்கள் நிம்மதியைப்பெற்றுவிடுகிறார்கள்.பொறுத்துப்போகாதவர் நிலை இன்று பரிதாபம்.

சென்ற பதிவிலேயே இந்தவரிகள் இருக்க்கின்றன.அட்ஜஸ்ட் செய்து போவது என்பது வெயிலைச் சமாளிக்க குளிர்நீர் அருந்துவது போலத்தான்.சூட்டை உணர்ந்துதான் ஆகவேண்டும்.வெகுநேரம் தாங்காது.கொஞ்சநேரத்தில் மீண்டும் வியர்க்க ஆரம்பிக்கும்.சமாளிப்பது என்பது  பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டதாக ஆகாது.ஒவ்வொருமுறை விட்டுக்கொடுக்கும்போதும் கொஞ்சம்கொஞ்சம் சேர்ந்து கொண்டிருக்கிறது.


ஆணோ,பெண்ணோ ஒருவரும் தன் கருத்து சரியல்ல என்று ஒப்புக்கொள்வதில்லை. அது உடனடியாக அவர்களது சுயமதிப்பைக் குறைக்கிறது.உண்மையாகவே தவறு என்று தெரிந்தபிறகும் சப்பைக்கட்டு கட்டுபவர்களையே அதிகம் பார்க்கமுடியும்.தன்னை ஒருவர் வெல்வதை மனிதமனம் ஏற்றுக்கொள்வதில்லை.தன்னுடைய வாய்ப்புக்காக காத்திருக்கும்.ஏதோ ஒருவகையில் தந்திரங்களைப் பயன்படுத்தியாவது வெற்றி பெற்றுவிடும்.
-